ரொம்ப நாளாக 'தேடப்பட்டு' வந்த ரவுடி சார் 'குதிரை' வெங்கடேசன் சிக்கினார்...!!
சென்னை: சென்னையில் திடீர் திடீரென ரவுடிகளை போலீஸார் வலை வீசிப் பிடிப்பார்கள். தற்போது அந்த சீசன் தொடங்கியுள்ளது.
லேட்டஸ்டாக குதிரை வெங்கடேசன் என்ற ரவுடியைப் போலீஸார் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உலவி வரும் ரவுடிகளைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளாராம்.
சின்ன ரவுடி.. பெரிய தாதா....
சென்னையில் சின்னதும், பெரியதுமாக ஏகப்பட்ட ரவுடிகள் சுதந்திரமாக உலவி வருகின்றனர்.
ரவுடிகளுக்கும் தொல்லை, மக்களுக்கும் கஷ்டம்
இந்த ரவுடிப் பசங்களால் மக்கள் படும் அவதி இருக்கே.. சொல்லி மாள முடியாது. வர்த்தகர்கள்தான் இதில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சமயத்தில் ரவுடிகளுக்குள்ளும் மோதிக் கொள்வதுண்டு.
ஒழிக்க தனிப்படை
இதையடுத்து கூடுதல் துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படையை தற்போது அமைத்துள்ளனர். இவர்களின் வேலை ரவுடிகளை வளைத்து வளைத்துப் பிடிப்பதுதான்.
ஒரே மாதத்தில் 10 ரவுடிகளுக்குக் காப்பு
இந்த தனிப்படையினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 ரவுடிகளைப் பிடித்துள்ளனராம் காவல்துறையினர்.
சரண்டரான ரவுடிமார்கள்
சில ரவுடிகள் என்கவுண்டருக்குப் பயந்து போய் தாங்களாக சரணடைந்து திருந்தி வாழறோம் சாமி என்று காவல்துறையிடம் மனு கொடுத்துக் காத்துள்ளனர்.
குதிரை வெங்கடேசன் சிக்கினார்
தற்போது ரவுடி வெங்கடேசன் என்ற ரவுடியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மணலியைச் சேர்ந்தவர் ஆவார்.
இன்ஸ்பெக்டர் மீதே குண்டு வீசியவர்
குதிரை வெங்கடேசன் பெரிய கில்லாடியாவார். இவர் 2003ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்துத் தலைவர் கந்தசாமியைக் கொலை செய்த வழக்கில் வழக்கில் உள்ளார். அதேபோல மகாகவி பாரதி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது குண்டு வீசியதாகவும் ஒரு வழக்கு உள்ளது. இது போல பல வழக்குகள்.
2008ல் கைதாகி ஜாமினில் எஸ்கேப்
2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் வெங்கடேசன். ஆனால் ஜாமினில் வெளியே வந்த அவர் பின்னர் தலைமறைவாகி விட்டார்.
பட்டப் பெயர் ரவுடிகளுக்கு கெட்ட நேரம்
தற்போது பட்டப் பெயர்களுடன் உலவி வரும் ரவுடிகளை லிஸ்ட் போட்டு போலீஸார் பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் குதிரையும் சேர்ந்துள்ளார்.