டோர் டெலிவரி, பீட்சாக்களுக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ள ‘பிரியாணி’
சென்னை: இந்த அவசர உலகத்தில் நாம் விரும்புவது எல்லாமே நமது வீட்டுக் கதவைத் தட்டிக் கிடைத்தால் நமக்கு மிகவும் மகிழ்ச்சி. அதிலும் உணவுப் பொருட்கள் சுடச் சுட கிடைப்பது அலாதி சுகம்.
வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் பீட்சாக்களுக்கு அடிமையாகிக் கிடப்பதற்கு இந்த டோர் டெலிவரி கூட ஒரு முக்கியமான காரணம் தான். ஒரு போன் பண்ணினால் போதும், அடுத்த பத்தாவது நிமிடம் பீட்சாபாய் நமது கதவைத் தட்டி, சுடச்சுட பீட்சாவை நமது கைகளில் தந்து விட்டுப் போவார்.
எனவே, தற்போது இந்த வெற்றிச் சூட்சுமத்தைக் கையில் எடுத்து பிரியாணியில் கலக்குகிறார்கள் சில பிரியாணிக் கடைகள். அதிலும் பிரியாணிக்கு மயங்காத நாக்குகள் குறைவுதான். அதனால் தான் பீட்சாக்களுக்கு போட்டியாக பிரியாணியைக் கையில் எடுத்துள்ளார்கள்.
கையைக் கழுவும் வேலை இல்லை...
கையை ரொம்ப கஷ்டப் படுத்தாமல் ஸ்பூனில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ள காரணாத்தினாலும் பாஸ்ட் புட் மோகத்தினாலும் பீட்சா, பர்கர் என வயிற்றை நிரப்பி வாழும் பழக்கத்துக்கு பழகிவிட்டனர் பலர்.
டோர் டெலிவரி தான் வசதி...
அதிலும் குறிப்பாக வேலை நிமித்தம் தனியாக தங்கியுள்ள இளசுகள், ஓய்வில் இருக்கும் நாட்களிலும், அலுவலக நேரங்களிலும் கூட வெளியில் சென்று சாப்பிட சோம்பல் பட்டு டோர் டெலிவரிக்கு அடிமையாகி கிடக்கிறார்கள்.
பீட்சாவை சரிகட்டும் பிரியாணி...
இதனை தங்களுக்கு சாதகமாக்கி, பீட்சாவின் சுவையை வீடு தேடி வந்து கொடுத்து மக்களை மயக்கிவிட்டனர் சிலர். காலந்தாமதமாக விழித்துக் கொண்ட நம்மவர்கள், தற்போது அதே பாணியில் நமது பிரியாணியை பிரபலப் படுத்தி வருகிறார்களாம்.
சைட் டிஷ் தேவையில்லை...
அவர்கள் பிரியாணியைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் பீட்சாப் போலவே பிரியாணிக்கும் வேறு முக்கிய சைட் டிஷ் இல்லாமலேயே சுவை தரும் சிறப்பு குணம் தான்.
சூப்பர் டேஸ்ட்...
ஆனால், என்ன பிரியாணியில் கடைக்கு ஒரு டேஸ்ட்டாக இருப்பது தான் இவர்களுக்கு கொஞ்சம் சவாலாக இருக்கிறதாம். மத்தபடி, கதவைத் தட்டி சுடச்சுட கொடுத்தால் பீட்சா போலவே, பிரியாணிக்கும் சப்புக் கொட்டுகிறார்களாம் சாப்பாட்டுப் பிரியர்கள்.
விலையும் குறைவு...
பொதுவாக, ஒரு பிளேட் பிரியாணியை ரூ 150 முதல் 170க்குள் வாங்கி விடலாம். ஆனால், பீட்சாவின் குறைந்தபட்ச விலையே ரூ 250. இந்த விலை வித்தியாசமும் பிரியாணி வெற்றி பெற பெரிதும் உதவுவதாக நம்புகிறார்கள் முதலாளிகள்.
இந்திய பீட்சா...
மசாலா சுவை, கண்ணைக் கவரும் கலர் என பீட்சாவுக்கு தான் சளைத்தவனில்லை என காட்டப் போகும் பிரியாணி வருங்காலத்தில் ‘இந்தியப் பீட்சா' என்ற பெயரைக் கூடப் பெறலாம் என்கின்றனர் சில உணவியல் வல்லுநர்கள்.