இதோ மீண்டும் ஒரு கலப்புத் திருமண காதல் ஜோடி: தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்
தஞ்சாவூர்: காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளவரசன்- திவ்யா ஜோடி மூலம் ஏற்பட்ட பரபரப்பு அடங்கவில்லை, அதற்குள் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கலப்புத் திருமண ஜோடி ஒன்று தஞ்சம் கேட்டு தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்தை அணுகியுள்ளனர்.
காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27). இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்.
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தமிழ்ச்செல்வி, கூறியதாவது: எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும், உடையார்பாளையம் தென்கச்சி பெருமாள்நத்தம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் விமல்ராஜ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
எங்களது காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரியவரவே சாதியை காரணம் காட்டி பிரிக்க நினைத்தனர். இதனையடுத்து வீட்டிற்கு தெரியாமல் கடந்த மாதம் 25ந்தேதி பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். திருமணம் முடிந்து நானும், என் கணவர் விமல்ராஜும் திருப்பனந்தாள் வடக்குத்தெருவில் வசித்து வருகிறோம்.
பாமகவினர் மிரட்டல்
இந்த நிலையில் என்னை விமல்ராஜ் கடத்தி சென்று விட்டதாகக்கூறி என் தந்தை ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டுதான் விமல்ராஜுடன் வந்து அவரை திருமணம் செய்து கொண்டேன்.
எனக்கும், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கும் என் சமூகத்தை சேர்ந்தவர்களும், பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்களும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எங்களை பிரிக்க பார்க்கிறார்கள். எனவேதான் நாங்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுக்க வந்தோம்
பொய் வழக்குப் பதிவு
மேலும் பொய் புகார் அடிப்படையில் எனது மாமனார், மாமியார் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று செந்தமிழ் செல்வி கூறியுள்ளார்.