நீ வேண்டாம்... பெற்றோரே போதும்: கலப்பு மணம் செய்த இளம்பெண் கூறியதால் கணவன் கதறல்
கடலூர்: நெய்வேலியை அடுத்த பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அம்பேத்கர்ராஜன் (25). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சோமியா (25). இருவரும் காதலித்து வந்தனர். அம்பேர்கர்ராஜனும், சோமியாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். சென்னையில் உள்ள குன்றத்தூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியேறினர்.
இதனிடையே சோமியா கடத்தப்பட்டதாக அவருடைய உறவினர்கள், கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தனர். அம்பேத்கர்ராஜனின் செல்போன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கடலூர் காவல் நிலையத்தில் கலப்பு திருமண ஜோடி சரணடைந்தது. அப்போது சோமியாவைப் பார்த்து பெண்ணின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து கடலூர் நீதிமன்றத்தில் இருவரும் நேற்று காலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் சோமியா தெரிவித்தார். இதையறிந்த அம்பேத்ராஜன் அதிர்ச்சி அடைந்தார். கண்கலங்கிய அவர், காதல் மனைவிக்காக காத்திருப்பேன் என செய்தியாளர்களிடம் நம்பிக்கையோடு தெரிவித்தார்.