உஷ்ஷப்பா.. இந்த நியூஸுக்கு என்ன தலைப்பு போடுறதுன்னே தெரியலை...!
கரூர்: கரூர் அருகே கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வந்த தனது தம்பி மற்றும் அவரது காதலியைக் கொலை செய்த அக்காவை, அவரது கள்ளக்காதலருடன் போலீஸார் கைது செய்தனர்.
அதாவது ஒட்டையூர் என்று ஒரு ஊர். கரூர் மாவட்டத்தில் உள்ளது. அந்த ஊரைச் சேர்ந்தவர் 50 வயதான ரங்கநாதன். இவர் ஜோதிடம் பார்த்து பிழைத்து வந்தார். அவரிடம் தண்டபாணி என்பவரின் மனைவியான 45 வயதான வளர்மதி ஜோசியம் பார்க்கப் போனார். போன இடத்தில் இருவரது கண்களும் பார்த்துக் கொண்டதில் தடம் புரண்டுப் போயினர். காதல் மூண்டது.
நீ வேண்டாம்.. என்று கூறி கணவரை விட்டுப் பிரிந்து ரங்கநாதனுடன் நாமக்கல் அருகே மோகனூரில் தனிக் குடித்தனத்தை ஆரம்பித்தார் வளர்மதி. 10 வருடமாக இது நீடித்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கழுத்து அறுபட்ட நிலையில், ரங்கநாதனும், வளர்மதியும் பிணமாகக் கிடந்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சமயத்தில் ரங்கநாதனின் அக்கா சந்திரா மற்றும் சிவசெல்வராஜ் ஆகியோர் போலீஸில் சரணடைந்தனர். சந்திராவின் கள்ளக்காதலராம் சிவசெல்வராஜ்.
சந்திரா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய தம்பி ரங்கநாதன், வளர்மதி என்ற பெண்ணோடு இருந்து வந்தார். என்னுடைய கணவர் இறந்து விட்டார். காட்டுப்புத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சிவசெல்வராஜ், என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், எனக்கு சேர வேண்டிய சொத்தை வழங்காமல், என்னுடைய தம்பி ரங்கநாதன் ஏமாற்றி வந்தார். இதனால், ஆத்திரமடைந்த நான், சிவசெல்வராஜ் துணையுடன், திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில்குமார், திருச்சியைச் சேர்ந்த மதன்குமார், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சையதுபாஷா ஆகிய மூன்று கூலிப்படையினரை வரவழைத்தோம். அவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தோம்.
கடந்த மாதம், 26-ம் தேதி வீட்டில், ரங்கநாதனும், அவருடன் வளர்மதியும் தனிமையில் இருந்தனர். அப்போது, கூலிப்படையினர் அவர்களை கழுத்து அறுத்து கொலை செய்தனர் என்று தெரிவித்தார்.
தற்போது கூலிப்படையினருக்குப் போலீஸார் வலை வீசியுள்ளனர்.