5 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடலாம்னா... உணவு பாதுகாப்பு மசோதா எதுக்கு?
டெல்லி: மத்திய திட்டக் குழு கிராமப் புற, நகர்ப்புற ஏழைகளுக்கான வரையறையை முன்வைத்து புள்ளி விவரங்களை வெளியிட்டதுதான் போதும்.. எத்தனை களேபர சர்ச்சைகள் சர்ச்சைகள்..
கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருவாய் ஈட்டுவோர் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு. இதை வைத்துதான் மாநிலங்களின் வறுமை நிலைமை பற்றி திட்டக் குழு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் விவாதம் நடத்தி வருகின்றன.
இதில் உச்சமாக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா ரூ1க்கே வயிராற சாப்பிட முடியும் என்றார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ரசூத்தோ ரூ.5க்கே முழுமையாக சாப்பிட முடியும் என்று கூறினார். பாலிவுட் நடிகர் ராஜ்பப்பரும் தமது பங்குக்கு ரூ.12க்கே நன்றாக சாப்பிட முடியும் என்றார். இப்போது அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
காங்கிரஸ் தரப்பு இப்படி பேசிக் கொண்டிருக்க இது மக்களை ஏமாற்றும் செயல் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார்.
நடைமுறையில் எந்த ஒரு மாநிலத்திலுமே ரூ.1, ரூ.5, ரூ.12க்கு வயிறார உணவு உண்டுவிட முடியாது என்பதே நிதர்சனம்.
சரி இவ்வளவு மலிவான விலையில் வயிறார உணவு உண்ண முடியும் எனில் அப்புறம் எதற்கு உணவு பாதுகாப்பு மசோதா? அதற்கு எதற்கு ரூ1 லட்சம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு? காங்கிரஸ் அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு மசோதா என்ன சொல்கிறது?
1 கிலோ அரிசி விலையை ரூ.3க்குதானே தருகிறீர்கள்? 1 கிலோ கோதுமையை ரூ.2க்குதானே தருகிறீர்கள்? ரூ.1க்கும் ரூ.5க்கும் ரூ.12க்கும் முழு சாப்பாடே கிடைத்துவிடும் என்கிற போது அரிசியையும் கோதுமையையும் ஏன் ரூ.3க்கும் ரூ.2க்கும் தர வேண்டும்? எதுக்கு அவசர பாதுகாப்பு சட்டம்? என்பதுதான் திருவாளர் பொதுஜனங்களின் கேள்வி.