பாக். அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியின் மம்னூன் ஹூசைன் வெற்றி!
பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இத் தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி வஜிஹுத்தீன் அகமது மற்றும் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(என்) கட்சியைச் சேர்ந்த மம்னூன் ஹுசைன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் தேதியை மாற்றியதில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுவிட்டு தேர்தலை புறக்கணித்தது. இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான மம்னூன் ஹூசைன் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாகிஸ்தானின் 12வது அதிபர் ஆவார்.
முன்னதாக இருந்த 11 அதிபர்களில் 5 பேர் ராணுவ ஜெனரல்கள். அதில் 4 பேர் சட்டவிரோதமாக ஆட்சியை கவிழ்த்து பதவிக்கு வந்தவர்கள். தற்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்தில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.