சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம்: 'குருவி' சிக்கினார்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் கொண்டு வந்த குருவியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் ‘‘ஸ்கேனர்'' கருவியில் பயணி ஒருவரின் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் பிடிபட்ட ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது அகமது சபீர் (47), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
அந்த மர்ம நபர் சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அங்கு கிடைக்கும் சம்பளம் தனது செலவுக்கு போதவில்லை என தனது நண்பர் சலீம் என்பவரிடம் கூறியுள்ளார். அவர் அதிக வருமானம் வரும் வழியை உனக்கு சொல்லித் தருகிறேன். நீ கஷ்டப்பட தேவையில்லை.
ஒரு பையை தருவேன் அதை பாலக்காட்டிற்கு கொண்டு சென்றால் அங்கு வந்து ஒருவர் பையை பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார்.
சலீம் கூறியபடி பணத்துக்கு ஆசைப்பட்டு சையது இந்த வேலையை செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களது திட்டத்தின்படி பையை கொண்டு வந்த போது ரெயில் நிலையத்தில் சிக்கி கொண்டார்.
அந்த பயணி கொண்டுவந்த பையில் 30 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் யாருடையது? யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கு வரிசெலுத்தாமல் மோசடி செய்த ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஹவாலா பணம் இருக்குமானால் இந்த வழக்கு வருமானவரித்துறைக்கு மாற்றப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.