தீவிரவாத தாக்குதல் அபாயம்.. தூத்துக்குடி துறைமுகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி: தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எதிரொலியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துறைமுகத்திற்குள் பார்வையாளர் வருகையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவித் தாக்கலாம் என்ற உளவுத்துறைத் தகவலைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடலோர பாதுகாப்பு
மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தின் கடலோர பகுதிகளிலுள்ள துறைமுகங்களின் பாதுகாப்பினை மேம்படுத்த மத்திய கப்பல்துறை அமைச்சகத்தை வலிவுறுத்தியுள்ளது.
ஜி.கே.வாசன் ஆய்வு
இதனைத்தொடர்ந்து, புதுடெல்லியில் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பெரிய துறைமுகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தார்.
தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு
துறைமுகங்களின் பாதுகாப்பு தொடர்பாக நடந்த துறைமுக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பினையும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் உதவியோடு அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கடல் வழி ஊடுறுவலைத் தடுக்க
மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உத்தரவுப்படி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதிகளில் தீவரவாதிகளின் கடல்வழி ஊடுறுவலை தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு
துறைமுக பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர காவல்படை மற்றும் காவல்துறையின் உதவியோடு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 3 அடுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே துறைமுகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்குத் தடை
துறைமுகத்தின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு, துறைமுகத்தினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான அனுமதி தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.