காற்றாலையின் இறக்கை விழுந்து பஸ்சில் பயணித்த 5 பெண்கள் பலி
கரூர்: கரூர் அருகே காற்றாலை இறக்கை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி மீது நேற்று பஸ் மோதியதில், பஸ்சில் வந்த ஒரு சிறுமி உட்பட 5 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் படுகாயடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கரூருக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கரூரை சேர்ந்த சாமிநாதன் (40)என்பவர் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர்.
இதேபோல் தூத்துக்குடியில் இருந்து காற்றாலை மின் நிலையம் அமைக்க விசிறி இறக்கையை ஏற்றிக்கொண்டு ஒரு டிரெய்லர் லாரி மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கட்டாம்பட்டி பிரிவு ரோட்டில், டிரெய்லர் லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்துவதற்காக, இடதுபுறமாக திருப்பினார். அப்போது பின்னால் வேகமாக வந்த பஸ், டிரெய்லர் லாரியின் இறக்கைகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. டிரெய்லரின் நீளத்தை விட 10 அடி நீளம் வெளியே நீட்டி கொண்டிருந்த இறக்கை, பஸ்சின் முன்புறத்தில் இருந்து கடைசி வரை கிழித்தது.
இதில் பஸ்சின் முன்புறம் அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நடராஜ் மகள் ஸ்ரீநிதி(5), அரவக்குறிச்சியைச் சேர்ந்த சத்திமா பரக்கத் (19), நஜீதா பானு (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் ஒரு பெண்ணின் உடலில் இறக்கை புகுந்து கிழித்துக்கொண்டு வெளியே வந்துள்ளது. மேலும் பலர் காயடைந்தனர்.
தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியின்போது அரவக்குறிச்சி கன்னியம்மாள் (60), குறிக்காரன்வலசுவை சேர்ந்த தெய்வானை ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.