என்ன சொல்றீங்க விஞ்ஞானிகளே, நாமெல்லாம் ‘செவ்வாய் கிரகவாசிகளா’...?
புளோரன்ஸ்: பூமியின் தோற்றம் செவ்வாயிலிருந்து வந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் செவ்வாயில் சென்று வசிக்கும் நாளுக்காக காத்திருக்க, அதற்கான ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. செவ்வாயில் வசிப்பதற்கான முன்பதிவுகள் கூட ஆரம்பமாகி விட்டன். மனிதன் சுற்றுலா செல்வதற்கு புதிய இடமாக செவ்வாய் கிரகத்தை எண்ணிக் கொண்டிருக்க, நமது பூர்வீகமே செவ்வாய் தான், பூமி ‘புகுந்தவீடு' தான் என ஆச்சர்யத் தகவலை கூறியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மனித உயிர்கள் மாநாடு....
மனித உயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களுக்கான மாநாடு ஒன்று இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது.
செவ்வாய்கிரகவாசிகள்....
இந்த மாநாட்டில், பூமியில் வாழும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது.
சிவப்பு கிரக மனிதர்கள்....
பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, அதாவது பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிகப்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய்கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கமாம் என வாதாடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எப்படி உருவாயின உயிர்கள்....
உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகளான ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., மற்றும் புரோட்டீன்கள் எப்படி ஒன்று சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
கடலில் கலந்த தாதுக்கள்....
பேராசிரியர் ஸ்டீவன் பென்னெர் என்ற ஆராய்ச்சியாளார் இது குறித்து கூறுகையில், ‘உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணமான ஆர்.என்.ஏவை உருவாக்குவதற்கு தேவையான தாதுப்பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் நிறைந்துள்ளன. இது பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்து இருக்கலாம்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
பூமிக்கு வந்த மனிதர்கள்....
அதன் தொடர்ச்சியாக, செவ்வாய் கிரகத்தில் ஆரம்ப காலத்தில் உருவான உயிர்கள் பின்னர் பூமிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கருத்து இக்கருத்தரங்கில் விவாதப் பொருள் ஆனது.