தூத்துக்குடி: 10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது!
தூத்துக்குடி: 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர்.
சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.
மேலும் சிறுமிகளை விசாரித்தபோதுதான் அறுபது வயதைக் கடந்த 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜுடிஷியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி, தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.