மாயமான மரகதலிங்கம்: ஹை கோர்ட்டில் 23–ந்தேதி அறிக்கை தாக்கல்: மாநகராட்சி ஆணையாளர் நந்தகோபால்
மதுரை: மதுரை குன்னத்தூர் சத்திரத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மாயமானது பற்றி 23ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் கிழக்கு கோபுரத்திற்கு முன்புறம் குன்னத்தூர் சாம்பயன் சத்திரம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் மீனாட்சிக்கு கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்கி செல்வதற்கு வசதியாக அறைகளும், மற்றொரு பகுதியில் பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் வைக்கப்பட்டு வழிபாட்டுக் கூடமாகவும் இருந்தது.
இந்த கூடத்தில் தினசரி லிங்கத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இச்சத்திரம் பராமரிப்புக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிதிலமடைந்த சுவர்களை பராமரிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் சத்திரத்தை உருவாக்கி யவர்களின் வாரிசுதாரர்கள் தங்களிடம் சத்திரத்தை ஒப்படைக்கக்கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சத்திரத்தின் கட்டிடங்கள் சிதிலமடைந்து இருப்பதாக கூறி மாநகராட்சியினர் மூலம் சில வருடங்களுக்கு முன்பு கட்டிடம் இடிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள பூஜை அறையிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் பொருட்கள் மாநகராட்சி உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் கைப்பற்றி மாநகராட்சி கருவூலகத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மரகதலிங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் முறையாக கருவூலகத்தில் ஒப்படைக்கவில்லை என புகார் எழுந்தது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கத்தை உதவி கமிஷனர் ஒருவர் கைப்பற்றி கொண்டு சென்று போலியாக மார்பிள் கல்லில் செதுக்கப்பட்ட லிங்கத்தை கருவூலத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மரகதலிங்கம் மாயமானது குறித்து, அறநிலையத் துறை சார்பில், தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
வழக்கறிஞர், முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவில் 2009ல், சத்திரத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது; மரகதலிங்கம் மாயமானது. மதிப்பு, 66 ஆயிரம் கோடி ரூபாய். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதை சிங்கப்பூருக்கு கடத்தி விட்டனர். மரகதலிங்கத்தை மீட்க, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தோம்; நடவடிக்கை இல்லை. சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி, என்.கிருபாகரன் முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளி, மரகதலிங்கம் மாயமானது குறித்து விசாரிக்க, மாநகராட்சி சார்பில், ஆறு பேர் குழு அமைத்துள்ளதாக கூறினார்.
அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் மட்டத்தில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திடீரென ஒரு மரகதலிங்கம் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த மரகதலிங்கத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றது யார்? அந்த மரகதலிங்கம் ஒரிஜினல் மரகதலிங்கமா? என்பது பற்றி தெரியவில்லை. இது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மரகதலிங்கம் மாயமானது தொடர்பாக இதுவரை 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியது உள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் இன்று பேசிய நந்தகுமார்,
மரகதலிங்கம் தொடர்பாக 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 13-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கையை அளிக்கும்படி அக்குழுவிடம் கூறி இருக்கிறேன். இந்த அறிக்கை வந்தபின் ஆய்வு செய்த பிறகு 23-ந்தேதி உயர்நீதிமன்றக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். இதே நாளில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையரும் மாயமான மரகதலிங்கத்துக்கு பதில் அளித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.