சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றும் எண்ணம் இல்லை - ஜி.கே.வாசன்
தூத்துக்குடி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்திய கப்பல் கழகத்தின் கடற்சார் பயிற்சி நிறுவன துவக்க விழா, துறைமுக உபயோகத்திற்கான புதிய பளுதூக்கும் இயந்திரங்களை நிறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் துறைமுக சோதனை சாவடி எண் 2 வரையிலான புதிய சாலை துவக்க விழா, ஆயுதகிடங்கு கட்டிடம் திறப்புவிழா ஆகியவை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, கப்பல்துறை செயலர் விஸ்வபதி திரிவேதி தலைமை வகித்தார். ஜெயதுரை எம்.பி., முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் வரவேற்றார். இந்திய கப்பல் போக்குவரத்துகழக தலைவர் மண்டல் கடல்சார் பயிற்சி மையம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடங்கி வைத்த ஜி.கே.வாசன்
விழாவில், மத்திய கப்பல் துறைஅமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய திட்டங்களை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது...
135 இடங்களில்
இந்தியாவில் 135இடங்களில் கடற்சார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. தென்னகத்தில் அதாவது ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை கணக்கிடும்போது முதன்முறையாக தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடல்சார் பயிற்சி மையத்தில் மீனவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தடை விலகியது
கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு கப்பல்துறை ஏற்கனவே விதித்திருந்த தடை விலக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடல்சார் பயிற்சி மையத்தில் முதல்கட்டமாக 40பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.
வெளித்துறைமுகம்
அதனைத்தொடர்ந்து, மத்திய கப்பல் துறைஅமைச்சர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளித்துறைமுகம் அமைக்கும் பணிகள் 2015ம் ஆண்டு துவங்கப்பட்டு 2021ம் ஆண்டு முடிக்கப்படும்.
5 கப்பல் தளங்கள்
இப்பணியில் முதல்கட்டமாக 6ஆயிரத்து 740கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் வெளித்துறைமுகத்தில் 5 கப்பல் தளங்கள் அமைக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
சேது சமுத்திரம் நிறைவேறும்
இதுதொடர்பான பிரமாணபத்திரத்தை மத்தியஅரசு இன்னும் சிலதினங்களில் தாக்கல் செய்யும் என்றார். விழாவில், கப்பல்துறை இணை செயலாளர் ஜூவாரி, கப்பல்போக்குவரத்து கழக இயக்குநர் சின்கா, எம்.பி.க்கள் ஜெயதுரை, ராமசுப்பு, துறைமுக பணியாளர்கள், கப்பல்முகவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.