போதை டிரைவரால் தண்டவாளத்தில் விழுந்த லாரி: ரயில் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்து, கீழே பாய்ந்த லாரி, தண்டவாளத்தில் விழுந்து, விபத்துக்குள்ளானது. இதில் கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், விபத்தில் இருந்து தப்பியது. அந்த பாதையில் 3 மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .
சேலம் அடுத்த கருப்பூரில், ஜி.பி.டி., தனியார் கிரானைட் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில், கிரானைட் கற்களை இறக்கிவிட்டு, நேற்றிரவு, 9.10 மணியளவில், டாரஸ் லாரி, ஓமலூர் நோக்கி புறப்பட்டது.
ஆத்தூர், கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் நல்லதம்பி, 40, லாரியை ஓட்டிச் சென்றார். ஓமலூர் அருகே, கருப்பூரில், பழையது, புதியது என இரு ரயில்வே மேம்பாலங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரு மேம்பாலத்துக்கு இடையே, ஆறு அடி அகலத்துக்கு இடைவெளி உள்ளது. பழைய ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென நிலைதடுமாறி, பக்கவாட்டு சுவரில் மோதியது. மோதிய வேகத்தில், ஆறு அடி இடைவெளிக்குள், லாரியின் பின்பக்க பகுதி பாய்ந்து, தண்டவாளத்தின் மீது விழுந்தது. லாரியின் முன்பகுதி, பக்கவாட்டு சுவரில் சிக்கி, சாய்கோணத்தில் நின்று விட்டது. விபத்து நடந்த சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள், திரளாக கூடினர். பாலத்தில் தொங்கியபடி, தண்டவாளத்தில் கிடந்த லாரி விபத்து குறித்து, போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த தடத்தில், கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ், சேலம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. பொதுமக்கள் உஷாராகி, விபத்தை தடுக்க, டார்ச் லைட் அடித்து, மும்பை ரயிலை நிறுத்தினர். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயில்வே துறை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய டிரைவர் நல்லதம்பியை மீட்டு, சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், டிரைவர் நல்லதம்பி, போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், கிரேன் மூலம், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியை மீட்கும்பணி நடந்தது. நீண்ட நேரம் நடந்த தீவிர போராட்டத்துக்கு பின், டாரஸ் லாரி மீட்கப்பட்டது.
விபத்தால், சேலம் மார்க்கமாக செல்லும், அனைத்து ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டு, மூன்று மணி நேர தாமதத்துக்கு பின் இயக்கப்பட்டது.