ஆசியாவில் 10ல் ஒரு ஆண் அறிமுகமில்லாத பெண்ணை கற்பழிப்பு: அதிர்ச்சி தகவல்
லண்டன்: ஆசியா-பசிபிக் பகுதியில் 10ல் ஒரு ஆண் தங்களுக்கு பழக்கமில்லாத பெண்ணை கற்பழித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆசியா-பசிபிக் பகுதியில் உள்ள 10,000 ஆண்களிடம் கற்பழிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பணிபுரியும் பேராசிரியர் ரேச்சல் ஜ்யூக்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுப்பது குறித்தும், ஆண்கள் பற்றியும் ஐ.நா.வின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வங்கதேசம், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.
10ல் ஒருவர்
ஆசியா - பசிபிக் பகுதியில் உள்ள ஆண்களில் 10ல் ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்திருப்பது தெரிய வந்துள்ளது.
பொழுதுபோக்கிற்காக
ஆய்வில் கலந்து கொண்ட ஆண்களில் 75 சதவீதம் பேர் பாலியல் உரிமைக்காவும், 50 சதவீதம் பேர் பொழுதுபோக்கிற்காகவும் பெண்களை கற்பழித்ததாக தெரிவித்தனர். மேலும் 38 சதவீதம் பேர் பெண்களை தண்டிக்க கற்பழித்ததாக தெரிவித்தனர்.
துணையை கொடுமைபடுத்துதல்
ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 50 சதவீதம் ஆண்கள் தங்கள் துணையை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக ஒப்புக் கொண்டனர். மேலும் 45 சதவீதம் ஆண்கள் தாங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்ததாக தெரிவித்துள்ளனர்.
கேள்வி
நீங்கள் யாரையாவது கற்பழித்துள்ளீர்களா என்று ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்கப்படவில்லை. மாறாக, உங்கள் மனைவி, காதலி அல்லாத பெண்ணை உங்களுடன் உறவு கொள்ளுமாறு எப்பொழுதாவது வற்புறுத்தியது உண்டா? அல்லது போதைப் பொருள் உட்கொண்ட நிலையில் அல்லது குடிபோதையில் இருந்த பெண்ணிடம் அவரது விருப்பத்தை கேட்காமல் உறவு கொண்டதுண்டா என்று கேட்கப்பட்டது.
ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 11 சதவீதம் பேர் அதாவது 10ல் ஒருவர் தங்கள் மனைவி அல்லது காதலி இல்லாத பெண்ணை கற்பழித்தது தெரிய வந்தது.