கோடை வெயில் அதிகரிகப்பு - எலுமிச்சை விலை எகிறல்
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கோடை வெயில் காரணமாக எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் நெல்லை மாவட்டம் புளியங்குடி முதலிடத்தில் உள்ளது. புளியங்குடி அருகே டிஎன் புதுக்குடியில் தனியார் வணிக வாளகத்தில் எலுமிச்சை ஏலம் விடுவதற்காக 29 கடைகள் உள்ளன.
எலுமிச்சை உற்பத்தி ஆண்டு முழுவதும் இருந்தாலும் கோடை காலத்தில் தான் எலுமிச்சம் பழத்திற்கு அதிக வரவேற்பு ஏற்படும். சாதாரண காலங்களில் ஆயிரம் பழங்கள் ரூ.500 முதல் ரூ.700 வரை விலை போகும். கோடை காலத்தில் இதை விட கூடுதலாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகும்.
கடந்த வாரம் புளியங்குடி மார்க்கெட்டில் 1000 எலுமிச்சை பழங்கள் ரூ.3500க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று அவை ஆயிரம் பழங்கள் (முதல் தரம்) ரூ.5000 வரை விற்கப்பட்டு வருகிறது.
வெயில் நீடிக்கும் பட்சத்தில் இந்த விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எலுமிச்சம் பழங்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்க எலுமிச்சை சாறு தொழிற்சாலை மற்றும் குளிர் பதன கிடங்கு அமைக்கும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்படி குளிர்பாதன கிடங்குகள் அமைக்கப்பட்டால் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும் எலுமிச்சை பழத்தை ஏற்றுமதி செய்யலாம். இதனால் புளியங்குடி சுற்று வட்டாரம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.