புறநகர் ரயில்களில் 80கிமீ வரையான பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை... மத்திய அரசு
டெல்லி: ரயில் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அன்றாடப் பணிக்குச் செல்வோர் அதிகம் பயன்படுத்தும் புறநகர் ரயில்களில் 80 கிமீ வரை தூரம் வரை பயணம் செய்வதற்கான கட்டண உயர்வை வாபஸ் பெற்றுள்ளது மத்திய அரசு.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், அப்போது கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான அரசு மத்தியில் அமைந்துள்ளது. இது, கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தியது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று ( 25ம் தேதி) முதல் அமலாகும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அறிவித்திருந்தார்.
சாதாரண மக்களைப் இந்த கட்டண உயர்வு பாதிக்கும் எனக் கூறி, இந்த திடீர் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதிலும் கடும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரயில் கட்டண உயர்வில் சிறிது மாற்றத்தை செய்து ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.
புறநகர் ரயில் கட்டணம்...
இந்த புதிய அறிவிப்பின் படி, புறநகர் ரயில்களில், இரண்டாம் வகுப்பில் 80 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் பயணிகளுக்கு 14.2 சதவீத கட்டண உயர்வு கிடையாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல் சீசன் டிக்கெட்டில் பயணம் செய்பவர்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சீசன் டிக்கெட்...
அதேபோல், சமீபத்தில் அறிவித்த கட்டண உயர்வின்படி சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மாதம் முழுவதும் அளவில்லா பயணம் செய்ய 30 பயணங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அறிவிப்பின்படி, மாதம் முழுவதும் அளவில்லாமல் பயணம் செய்ய 15 பயணங்களுக்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
5 கிமீ வரை...
ஆனால், சீசன் டிக்கெட்டிற்கு 14.2 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி 5 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் சீசன் டிக்கெட் பயணிகளுக்கு 85 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின்படி அந்த பயணிகளுக்கு 50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
21 முதல் 25 கிமீ வரை...
அதேபோல், 21 கி.மீ முதல் 25 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் பயணிகளுக்கான கட்டணம் 160 ரூபாயில் இருந்து 185 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டண உயர்வின்படி அவர்களுக்கு 115 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
28ம் தேதி முதல் அமல்...
மேலும், 46 முதல் 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் பயணிகளுக்கு திருத்தப்பட்ட கட்டண அறிவிப்பின்படி 180 ரூபாய் குறைக்கப்பட்டு 270 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.