தமிழகத்தில் நாளை ரயில் டிக்கெட் வினியோகம் ரத்து!
சென்னை: பராமரிப்பு பணியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை ஒன்றரை மணி நேரம் ரயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
"ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்களில், பயணிகள் முன்பதிவு டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட் பெற்று வருகின்றனர்.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் உள்ள கணினி முன்பதிவு மையங்களில் நாளை காலை 11.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இணையதளம் மூலமாகவும், கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர்களிலும் தற்காலிகமாக டிக்கெட் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பின்னர் 2 மணி வரை டிக்கெட் கவுண்ட்டர்களில் வழக்கம்போல் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் இணையதளத்தின் மூலமாகவும் வழக்கம்போல் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.