முன்னாள் கவர்னர் கையெழுத்துள்ள நோட்டுகள் செல்லுபடியாகும்-ரிசர்வ் வங்கி
டெல்லி: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்த டி.சுப்பாராவ் கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவியில் உள்ளார்.
ஆனால் இந்த 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சகம் வெளியிட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் பழைய கவர்னர் டி.சுப்பாராவின் கையெழுத்து உள்ளது.
இவற்றின் செல்லுபடி தன்மை குறித்து பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், "புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்பது ஒரு தொடர்பணி. இதில் மாற்றம் செய்வது நீண்டதொரு பணி. அது நடந்து வருகிறது.
இது முடிய சிறிது காலம் ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.