ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே இந்திய ரூபாய் மதிப்புதான் வேகமாக முன்னேறுது
டெல்லி: இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்பதை கருத்தில்கொண்டு, பொருளாதாரத்தில் நிகழ்ந்த நேர்மறை மாற்றத்தால், ஆசிய பசிபிக் நாடுகளிலேயே இந்திய ரூபாய் மதிப்புதான் மிகவும் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிந்த வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.52-ஆக இருந்தது. இதன் மூலம்கடந்த ஒரு மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 5.3 சதவீதம் அதிகரித்து இந்த பிராந்தியத்தின் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெருமையை பெற்றது.
இந்தாண்டின் துவக்கத்தில் டாலருகுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.8ஆக இருந்தது. ஆண்டு தொடக்கத்தை ஒப்பிட்டால் இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு 327 பைசாக்கள் உயர்ந்துள்ளன. இதற்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளதும் ஒரு காரணம் என்றபோதிலும், அரசியல் மாற்றம், ரூபாய் மதிப்பு ஏற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக 68.80 என சரிந்த நிலையில், இப்போதைய முன்னேற்றம் சந்தை வல்லுநர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தோனேசியாவின் ருபியா 4.6 சதவீதமும், நியூசிலாந்து டாலர் 3.75 சதவீதமும், ஆஸ்திரேலிய கரன்சி 3.5 சதவீதமும் உயர்ந்துள்ளன.
ஜப்பான், தென் கொரியா, மலேசியா நாடுகளின் பண மதிப்பு 2 முதல் 3சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இப்பிராந்தியத்திலேயே அதிகபட்சமாக 5.3 சதவீதம் உயர்ந்துள்ளது.