ரூபாயின் மதிப்பு மேலும் கொஞ்சம் உயர்ந்தது.. 6வது நாளாக தொடர் சாதனை!: 62.92 ஆனது
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் கொஞ்சம் வலுவடைந்துள்ளது.
நேற்று 63.38 என்ற நிலையை எட்டிய ரூபாய் மதிப்பு இன்று மேலும் உயர்ந்து 62.92 என்ற நிலையை அடைந்துள்ளது.
கடந்த 6 நாட்களில் ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல டாலருக்கு நிகரான அனைத்து ஆசிய நாடுகளின் கரன்சிகளின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியையடுத்து அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து, அந் நாட்டு தொழில்துறைக்கு உதவி செய்தது. இதற்காக 85 பில்லியன் டாலர் அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி வழங்கியது.
இப்போது இந்த உதவிகளைக் குறைக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. மேலும் கொடுத்த நிதியுதவிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசின் பங்குகளில் முதலீடு செய்ய உலகளவிலான முதலீட்டாளர்களிடையே போட்டி உருவானது. இதனால் தான் டாலர் மதிப்பு அதி வேகமாக உயர்ந்தது.
இந் நிலையில் அடுத்த வாரம் கூடவுள்ள அமெரிக்க அரசின் Open Market Committee, டாலரின் மதிப்பை நிலைநிறுத்த மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. ஆனால், பெரிய அளவில் இந்தக் கமிட்டி எந்த முடிவையும் எடுக்காது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக அந் நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய நிதி உதவிகள் பெரிய அளவில் திரும்பப் பெறப்படாது என்று தெரிகிறது.
இதையடுத்து அமெரிக்க பங்குகளில் முதலீடுகள் செய்வது குறைந்து, ஆசிய பங்குகளில் முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளின் கரன்சிகளின் மதிப்பும் உயர ஆரம்பித்துள்ளது.
மேலும் சிரியா மீது இப்போதைக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போவதில்லை, இதனால் கச்சா எண்ணெய் விலை உயரப் போவதில்லை என்பதும் ரூபாய் உள்ளிட்ட ஆசிய கரன்சிகளின் மதிப்பு உயர இன்னொரு முக்கிய காரணமாகும்.