அகமதாபாத்: பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய 13 வயது ‘டிரைவர்’... 2 பேர் பலி
அகமதாபாத்: அகமதாபாத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிய சம்பவத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் இன்று அதிகாலை தனது தந்தையின் காரை ஓட்டி வந்துள்ளான். தானிலிம்டா பகுதியில், வாக்ஜிபாய் சவல் என்ற இடத்தின் அருகே வந்த போது, தனது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் படுத்திருந்த ஊழியர்கள் மீது ஏறியது.
இதில் சம்பவ இடத்திலேயே ரசித்கான் (40) மற்றும் ரஷிதா முன்சிபா ஷேக் (40) என்ற இரு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளான். ஆனால், காயமடைந்தவர்கள் போலீசில் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவனின் முகவரியைக் கண்டு பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிறுவனைக் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அச்சிறுவனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.