லிபியா: நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து 20 பேர் பலி - 100 பேர் மாயம்
திரிபோலி: லிபியாவில் 150 பயணிகளுடன் பயணம் செய்த கப்பல் ஒன்று நடுக்கடலில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் நேற்றுமுன்தினம் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது கப்பல் திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லிபிய கடற்படையினர் கடலில் மூழ்கிய 22 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், 20 பயணிகள் பிணமாக மீட்கப்பட்டனர். நூறுக்கும் அதிகமான பயணிகளை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கடல்மார்க்கமாக சென்று இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். இவ்வாறு குடியேறியதாக இந்த ஆண்டு இதுவரை 80 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கப்பலிலும் அவ்வாறு 150-க்கும் மேற்பட்டோர் சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் சரி வரத் தெரிவிக்கப்படவில்லை.