மே. வங்கத்தில் 24 மணி நேரத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பார்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் தபாஸ் குமார் கோஷ் கூறியதாவது:
பார்த்வான் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் இருந்து காலை 6 மணிவரையில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் அதற்கு பின்னர் உயிரிழந்தனர்.
குழந்தைகளில் சிலர் இந்த மருத்துவமனையில் பிறந்தவர்கள். பலர் மற்ற மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு இங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்கள்.
குழந்தைகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். உயிரிழ்ந்த குழந்தைகள் அனைத்தும் பிறந்து சிலமாதங்களே ஆனவர்கள். நவராத்திரி பண்டிகை காரணமாக மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
360 பிறந்த குழந்தைகளை வெறும் இரண்டு நர்சுகளே பார்த்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு புதிய நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.,
இவ்வாறு தபாஸ் குமார் கூறினார்.
பார்த்வான் மருத்துவமனையின் முன் குழந்தைகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.