மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 14 இஸ்ரோ விஞ்ஞானிகளின் செல்லப் பிள்ளை... மங்கள்யான்!
பெங்களூர்: ஒட்டு மொத்த இந்தியாவும் நெஞ்சம் நிறைய படபடப்பும், பூரிப்புமாக பார்த்திருக்கும் மங்கள்யான் விண்கலத்தின் பின்னணியில் 14 இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு பொதிந்திருக்கிறது.
இந்தக் குழுவின் திட்ட இயக்குநராக, அதன் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை என்ற தமிழர் திகழ்வது தமிழர்களுக்கு இரட்டிப்பு பெருமையாகும்.
இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனின் வழிகாட்டலில் மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள்தான் மங்கள்யான் செவ்வாய்க்குச் செல்ல முக்கியக் காரணம் ஆவர்.
சாதனை விஞ்ஞானிகளின் பெயர்கள்
கே.ராதாகிருஷ்ணன் - இஸ்ரோ தலைவர்
மயில்சாமி அண்ணாதுரை - மிஷன் திட்ட இயக்குநர்
எஸ். ராமகிருஷ்ணன் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர்
எஸ்.கே.சிவக்குமார் - இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர்.
பி. குன்னிகிருஷ்ணன் - பிஎஸ்எல்வி திட்ட இயக்குநர்.
சந்திரதத்தன் - திரவ எரிபொருள் திட்ட இயக்குநர்.
கிரண்குமார் - செயற்கைக் கோள் அப்ளிகேஷன் மையத்தின் இயக்குநர்.
பிரசாத் - சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநர்.
அருணன் - மங்கள்யான் பிராஜக்ட் இயக்குநர்.
ஜெயக்குமார் - பிஎஸ்எல்வி திட்ட உதவி பிராஜக்ட் இயக்குநர்.
பன்னீர் செல்வம் - ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் மையத்தின் தலைமைப் பொது மேலாளர்.
சுப்பையா அருணன் - இஸ்ரோ பிராஜக்ட் டைரக்டர்.
கேசவராஜு - மிஷன் இயக்குநர்.
கோட்டீஸ்வர ராவ் - அறிவியல் செயலாளர்.
கே.ராதாகிருஷ்ணன்
இஸ்ரோ தலைவர் என்ற வகையில், இந்தத் திட்டத்தை நேரடியாக மேற்பார்வையிட்டு அதை வழிநடத்தி வந்தவர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன்.
மயில்சாமி அண்ணாதுரை
தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரைதான் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனின் திட்ட இயக்குநர் ஆவார். இவர் 1982ம் ஆண்டு முதல் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றஇ வருகிறார். பல்வேறு ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள்களை ஏவும் திட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர் அண்ணாதுரை. பட்ஜெட் நிர்வாகம், மங்கள்யானை நிறுவியது, திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அண்ணாதுரைதான் கவனித்து வந்தார் அத்தோடு மட்டுமல்லாமல் சந்திரயான் 1 திட்டத்திற்கும் இவர்தான் திட்ட இயக்குநராக இருந்துள்ளார். சந்திரயான் 2 திட்டத்தையும் இவர்தான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ். ராமகிருஷ்ணன்
இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஆவார். 1972 முதல் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி வருகிறார். பிஎஸ்எல்வியை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் இவர்.
எஸ்.கே.சிவக்குமார்
இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர் இவர். இந்தியாவின் செயற்கைக் கோள் திட்டங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார். மங்கள்யான் குறித்து சிவக்குமார் கூறுகையில், எங்களது குழந்தை இப்போது விண்வெளியில் உள்ளது. ஒரு சிசேரியன் அறுவைச் சிகிச்சை போல உணர்கிறோம் என்றார்.
குன்னிகிருஷ்ணன்
பிஎஸ்எல்வி திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார் பி.குன்னிகிருஷ்ணன். மிஷன் இயக்குநராக இருக்கிறார். எட்டு பிஎஸ்எல்வி ஏவுதலை இவர் வெற்றிகரமாக கண்டுள்ளார்.
சந்திரதத்தன்
திரவ எரிபொருள் திட்ட இயக்குநர் சந்திரதத்தன். முதலில் எஸ்எல்வி 3 திட்டத்தில் இணைந்திருந்தார். பின்னர் திட எரிபொருள் திட்டத்திற்கு மாறினார். தற்போது மீண்டும் திரவ எரிபொருள் திட்டத்திற்கு வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ஆகியவற்றுக்குத் தேவையான மோட்டார்களை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார் சந்திரதத்தன்.