பீகாரில் நாளை மோடி பொதுக் கூட்டம்! 14 சிறப்பு ரயில்கள்- 3 ஆயிரம் பேருந்துகளில் தொண்டர்கள் வருகை!!
பாட்னா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாளை பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள 14 சிறப்பு ரயில்களில் தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். ஜான்சி நகரில் நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.
இந் நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக மிக பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன.
பிரமாண்ட மேடை
பீகார் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளத்துக்கு முழுவதும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேடை மீது 30 அடி நீளத்துக்கு எலக்ட்ரானிக் ஸ்கிரீன் வைத்துள்ளனர்.
14 சிறப்பு ரயில்கள்
மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் முழுவதும் இருந்து பாட்னா நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பீகாரின் பல பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் பாட்னாவுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் நாளை காலை பாட்னா வந்து சேரும்.
3 ஆயிரம் பேருந்துகள்
ரயில்கள் தவிர 3 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. எனவே பாட்னாவில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலகிய நிதீஷ்
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதாவும் கடந்த 17 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தன. ஆனால் மோடியை பாஜக முன்னிறுத்தியதால் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிதீஷ்குமார், கூட்டணியில் இருந்து விலகினார்.
முதல் முறையாக பீகாரில்..
இக் கூட்டணி பிளவுக்கு பிறகு முதன்முதலாக பீகாருக்கு நாளை மோடி செல்கிறார். எனவே நாளைய கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மோடி பட்டாசு
மோடி வருகையை "மோடி பட்டாசு" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோடி டீக்கடைகள்
இது தவிர பீகார் முழுவதும் "மோடி இலவச டீக்கடைகள்" திறக்கப்பட்டுள்ளன. இதனால் பாட்னா நகரம் இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது.
எங்கெங்கும் மோடி மயம்
பாட்னாவில் ஹோட்டல், விடுதி அறைகள் நிரம்பி விட்டன. பாட்னாவில் எங்கு பார்த்தாலும் மோடி படம் போட்ட போஸ்டர்கள், கட்-அவுட்டுகள் நிறைந்துள்ளன.