இமாசலில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி, 17 பேர் படுகாயம்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று 400 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயமடைந்தனர்.
35 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த அந்த பேருந்து கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ரோக்துராங் என்ற கிராமத்தின் அருகே வரும்போது 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பயணிகள் அனைவரும் மொத்தமாக பள்ளத்தில் விழுந்தனர். உடனே அங்கு வந்த மீட்புப்படையினர், அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்தின் டிரைவர், கண்டக்டர் உட்பட 15பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து போலீஸ் துணை கமிஷனர் டி.டி.சர்மா கூறுகையில்: "சம்பவ இடத்திலேயே இறந்த சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்" என்றார்.