ஜம்மு எல்லையில் 150 மீட்டர் ஊடுருவல் சுரங்கம்... பாக். தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
ஜம்மு: பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லைப் பகுதியில் தோண்டி வந்த 150 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதையை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில், மிக மிக முக்கியப் பகுதியான பலன்வாலா பகுதியில் இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை இதன் மூலமாக இந்தியாவுக்குள் அனுப்ப இந்த சுரங்கப்பாதையை தீவிரவாதிகள் உண்டாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது ஜம்மு பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுறுவல் முயற்சிகளை தீவிரவாதிகளால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் சுரங்கப் பாதை வழியாக ஊடுறுவ தீவிரவாதிகள் முயல்வதாக பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.
150 மீட்டர் நீளம்...
ஆகஸ்ட் 22ம் தேதி இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 130 முதல் 150 மீ்ட்டர் வரை இது நீளம் கொண்டதாக உள்ளது. இரண்டரை அடி அகலம் கொண்டதாக உள்ளது.
நுழைவுப் பாதை...
இந்த சுரங்கப் பாதையின் நுழைவுப் பகுதி பாகிஸ்தான் பகுதியில் உள்ளது என்று இந்திய ராணுவத்தினர் கூறியுள்ளனர். இந்த சுரங்கப் பாதையானது, தரைமட்டத்தில் 20 அடி ஆழமும், 4 அடி உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது.
ஆயுதக்கடத்தல்...
ஆயுதக் கடத்தல், தீவிரவாதிகளை அனுப்புவது, போதைப் பொருள் கடத்தல் என பல காரணங்களுக்கு இதை தீவிரவாதிகள் பயன்படுத்த முயற்சித்திருக்கலாம் என்று தெரிகிறது.
முழுமையடைவில்லை...
இருப்பினும் இந்த சுரங்கப் பாதையை இன்னும் முழுமையாக தீவிரவாதிகள் கட்டி முடிக்கவில்லை. அதற்குள் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து விட்டனர்.
ஊடுறுவல் முயற்சி...
பல்லன்வாலா பகுதியில் சக்லா என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்த சுரங்கப் பாதை நீள்கிறது. இந்த இடத்தில்தான் கடந்த ஜூலை 22ம் தேதி தீவிரவாத ஊடுறுவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். அதில் ஒரு தீவிரவாதியும், நமது ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
6 ஆண்டுகளுக்கு முன்பு...
ஏற்கனவே, இதே பகுதியில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு சுரங்கப் பாதையை ராணுவம் கண்டுபிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.