முசாபர்நகரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி
முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். சம்பவ இடத்தில் கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முசாபர் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது.
62 பேர் உயிரிழப்பு
செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 62 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இந்த கலவரம் நடந்தது.
முகாம்களில் 40000 பேர்
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது. அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
திரும்பிய அமைதி
ராணுவத்தின் தீவிர ரோந்து காரணமாக தற்போது அந்த மாவட்டத்தில் அமைதி திரும்பியது. நீடித்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் அங்கு இயல்புநிலை திரும்பியது.
மீண்டும் கலவரம்
இந்த நிலையில் அவ்வப்போது முசாபர்நகரில் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த செவ்வாய்கிழமையன்று முசாஃபர்நகரில் பாஜக மூத்த தலைவர் ஓம்வீர் (40) அடையாளம் தெரியாத நபர்களால் இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 20 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் முசாபர்நகரின் புகானா என்ற பகுதியில் இரு பிரிவினரிடையே முன் விரோதம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த மோதல் இன்று கலவரமாக மாறியது.
இருவர் பலி
கலவரத்தின்போது கிராமத்தினர் சிலர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் இருவர் பலியானதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் குவிப்பு
சம்பவ இடத்தில், பதற்றம் நிலவுவதை அடுத்து புகானா மாவட்டம் முழுவதிலும், கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.