நீரா ராடியா என்னை சந்தித்துள்ளார், ஆனால் அவருடன் போனில் பேசியதாக நினைவு இல்லை: ராசா சாட்சியம்
டெல்லி: கலைஞர் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பேன். ஆனால் அதை யார் நிர்வகித்து வருகிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன்னை ஒரு சாட்சியமாக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்ற நீதிமன்றம் அவரை சாட்சியமாக சேர்த்தது.
இந்நிலையில் திங்கட்கிழமை ராசாவிடம் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது அவர் கூறுகையில்,
நீரா ராடியா
டாடா குழுமம் குறித்து பேச நிறுவனங்களின் முன்னாள் தரகரான நீரா ராடியா, டாடா குழும சேர்மன் ரத்தன் டாடாவுடன் வந்து என்னை என் இல்லத்தில் சந்தித்து பேசினார். ராடியா வனத்துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அலுவலங்களில் என்னை இரண்டு முறை சந்தித்துள்ளார்.
போன்
ராடியாவுடன் தொலைபேசியில் பேசியதாக ஞாபகம் இல்லை. மேலும் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டாரா என்பதும் நினைவில் இல்லை. ஆனால் நான் ஒரு முறை கூட அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை.
கலைஞர் டிவி
கலைஞர் டிவி கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. அந்த டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதால் அது பற்றி தெரியும். ஆனால் அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
கனிமொழி
ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் டெல்லியில் உள்ள என் வீட்டிற்கு கனிமொழி வந்துள்ளார் என்றார் ஆ.ராசா.