2ஜி ஊழல்.. ராசா, கனிமொழி மீதான குற்றப்பத்திரிக்கை தயார்... விரைவில் அமலாக்கப் பிரிவு தாக்கல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, கனிமொழி ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு விரைவில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.
குற்றப்பத்திரிக்கைத் தயாரிக்கப்பட்டு அது சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாம். அது முடிந்த பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
திமுகவுக்குச் சொந்தமான கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி நிதியை திருப்பி விட்டது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் டிவிக்கு முறைகேடான வகையில் ரூ. 200 கோடியை திருப்பி விட்டதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாக தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யைச் சேர்ந்த சரத்குமார் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. எனவேதான், இதுதொடர்பாக சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை மத்திய அமலாக்கத்துறை கேட்டிருக்கிறதாம்.