கோவாவுக்கு சுற்றுலா சென்ற 3 சென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்கள் கடலில் மூழ்கி பலி
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 5 கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறையை ஒட்டி அவர்கள் இன்ப சுற்றுலா புறப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை கோவா சென்றடைந்த அவர்கள் அங்குள்ள மோர்ஜிம் கடற்கரையில் மாலை 6.50 மணி அளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், கைகளை அசைத்து அபய குரல் எழுப்பினார்கள்.
உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களில் 3 பேரை மீட்டனர். 2 பேரை காணவில்லை. மீட்கப்பட்ட 3 பேரையும் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடலில் மூழ்கி காணாமல்போன இருவரின் உடல்களும் சிறிது நேரத்தில் கடலில் மிதந்தன. உயிரிழந்தவர்கள் சி.கே.கோபாலகிருஷ்ணன் (வயது24), நவின் பல்லா (24), ஷ்ரவண் ரெட்டி (29) என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரில், கவுதம் குமார் என்பவர் நடந்த சம்பவத்தை விவரித்தார். அப்போமு அவர், ‘‘நாங்கள் 5 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். சென்னையில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நாங்கள் பணிபுரிந்து வந்தோம். விடுமுறையில் சுற்றுலாவாக வந்த இடத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டோம்'' என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.