காஸாவில் சிக்கித் தவித்த 4 இந்திய டெய்லர்கள் நாடு திரும்பினர்
டெல்லி: இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமடைந்து போயுள்ள காஸா முனைப் பகுதியில் சிக்கித் தவித்த நான்கு இந்திய தையல் தொழிலாளர்கள் அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், பரேலியைச் சேர்ந்த ரஷீத் அகமது, மும்பையை சேர்ந்த அன்வர்உசேன், பீகார் கிஷன்கஞ்சை சேர்ந்த கமில் ஆகிய 4 தையல் தொழிலாளர்களும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் காஸா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தது. கடந்த 19 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. காஸாவே சின்னாபின்னாமிகியுள்ளது.
இதில் சிக்கித் தவித்த பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்து அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இதில் இந்த 4 இந்தியர்களும் உயிர் தப்பிக்க பாலஸ்தீனர்களுடன் அங்குமிங்கும் ஓடி திரிந்தனர். இறுதியில் ரமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை எடுத்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்களின் தீவிர முயற்சியால் அவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் டெல்லி வந்தனர். அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு சென்றனர்.
காஸா நிலைமை குறித்து அவர்கள் கூறுகையில், தெருக்களில் பிணங்கள் குவியல் குவியலாக கிடந்தன. அதன் மீதுதான் மக்கள் ஓட்டம் பிடித்தனர். குண்டுகள் மற்றும் ராக்கெட் வீச்சில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். அதை நினைத்தாலே இன்னும் முதுகு தண்டுவடத்தின் அடியில் ஒருவித நடுக்கம் ஏற்படுகிறது.
குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனியர்களுடன் நாங்களும் சேர்ந்து பல இடங்களுக்கு ஓடி உயிர் தப்பினோம். பல நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தோம். எங்கள் நிலைமையை நினைத்து அறையின் மூலையில் முடங்கி அழுது தவித்தோம்.
எங்கு பார்த்தாலும் தாறுமாறாக ரத்தக்காடாக காட்சி அளித்தது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டி கொண்டோம். சண்டையின்போதும் நாங்கள் ரம்ஜான் நோன்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து மேற்கொண்டோம் என்றனர்.