ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4வயது சிறுமி சடலமாக மீட்பு- 50 மணி நேர போராட்டம் வீணாணது
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த 4வயது குழந்தையை மீட்கும் பணி தோல்வியில் முடிவடைந்தது. 50 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு குழுவினருக்கு சிறுமியின் சடலத்தைதான் மீட்க முடிந்ததால் கர்நாடக மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் நாகத்தானா கிராமத்தை சேர்ந்த ஹனுமந்த் பாட்டீல் மகள் அக்ஷதா (4). சிறுமியின் தந்தையும், தாயும் கூலி வேலை செய்து வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அக்ஷதா போர்வெல் கிணறு அமைக்கப்பட்டுவரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று அவளை துரத்தியதாக கூறப்படுகிறது. நாய்க்கு பயந்து அக்ஷயா அங்குமிங்கும் ஓடியபோது, திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் கால் தவறி விழுந்துவிட்டாள். இதையறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அன்று இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டுவந்தனர்.
300 அடி தோண்டியும் தண்ணீர்வராததால் இந்த போர்வெல்லை தோட்ட உரிமையாளர் மூட முயற்சிசெய்துள்ளார். அதில் 60 அடி ஆழம்வரை மூடப்பட்டுள்ளது. இதில்தான் சிறுமி விழுந்தாள். ஆனால் 28 முதல் 30 அடி ஆழத்தில், நடுவேயிருந்த மண், மரக்கட்டைகளில் சிக்கி குழந்தை அடி ஆழம்வரை போகவில்லை என்று கூறப்பட்டது. எனவே போர்வெல் அருகே சுமார் 35 அடி ஆழத்தில் மற்றொரு குழி தோண்டி குழந்தை அதன்வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புனேயிலிருந்து தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர். சிறுமிக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
இதனிடையே நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் ரோபோ உதவியுடன், குழந்தையை பத்திரமாக மீட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டனுக்கு மீட்பு படையினர் தகவல் கொடுத்து பிஜாப்பூர் வருமாறு கேட்டுக்கொண்டனர். ரோபோவுடன் வந்த மணிகண்டன் புதன்கிழமை மாலை முதல் மீட்பு நடவடிக்கையை தொடங்கினார். ரோபோ கருவியை போர்வெல்லுக்குள் விட்டு குழந்தையை ரோபோவின் கரங்களை வைத்து கவ்வி பிடிக்க வைக்க முயன்றார். ஆனால் ரோபோவின் கரங்களில் மணல் கவ்வப்பட்டது. இதற்கு காரணம் குழந்தை விழுந்ததற்கு பிறகு அவள் மீது மணல் விழுந்ததுதான் என்று கூறப்பட்டது.
குழந்தை விழுந்ததும் வேடிக்கை பார்க்கவும், ஆர்வத்திலும் ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் முண்டியடித்து பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது அவர்கள் காலில் பட்ட மணல் போர்வெல்லுக்குள் விழுந்து குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே, ரோபோவின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. ரோபோவுக்கு மாற்றாக, ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாறை பகுதியாக இருப்பதால் சுரங்கம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணியளவில் குழந்தை அருகேவரை சுரங்க பாதை துவாரம் போடப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அப்போது மீட்பு படை வீரர்கள் குழிக்குள் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்துள்ளனர். அக்ஷதா இறந்துபோய் அவளது உடலில் இருந்து துர்நாற்றம் வீசலாம் என்ற சந்தேகம் மீட்பு படையினருக்கு வலுத்தது. நள்ளிரவில் சுரங்கம் வழியாக மீட்பு படையினர் கிணற்றில் அக்ஷதா இருந்தபகுதிக்கு நுழைந்து சென்றனர். ஆனால் அவர்கள் சந்தேகித்தபடி அக்ஷதா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். 50 மணி நேரத்துக்கும் மேலாக இரவு பகல் பாராமல் நடந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
கிணற்றில் விழுந்த சில மணி நேரங்களிலேயே அக்ஷதா உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவேதான் உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. ஏதாவது வியக்கத்தக்கவகையில் நடந்து அக்குழந்தை உயிருடன் திரும்புவாள் என்று எதிர்பார்த்திருந்த ஒட்டுமொத்த மாநிலமுமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.