காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டம் சப்ஜியான் மற்றும் மாண்டி பகுதியில் இந்திய பகுதியின் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ஆயுதங்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆறு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி அளித்தனர். நேற்று மாலை தொடங்கிய துப்பாக்கி சூடு நள்ளிரவு வரையில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்தது. இரவு முழுவதும் மாறி மாறி நடந்த இந்த தாக்குதல் சம்பவங்கள், நள்ளிரவு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.