நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 650 திட்டங்கள்: வெங்கையா நாயுடு தாக்கு
பாட்னா: ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் பெயரில் மட்டும் நாட்டில் 650 திட்டங்கள் உள்ளன என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாட்டில் நடந்த அனைத்தும் ஒரு குடும்பத்தின் பெயரில் நடத்தியுள்ளது காங்கிரஸ். அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் நாட்டுக்கு நல்லது செய்யவில்லை என்பது போல் காண்பித்துள்ளது காங்கிரஸ். ஜவஹர்லால் ஹேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரின் பேரில் மட்டும் காங்கிரஸ் 650 திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஒருவரை மட்டும் மையமாக வைத்து அரசியல் செய்வது காங்கிரஸ் தான். 1975ம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர் தான் தங்களின் குடும்பத்தை காக்க அரசியல் அமைப்பில் திருத்தம் செய்தார் என்றார்.
2002ம் ஆண்டு நடந்த கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கோர மறுத்துள்ளாரே என்று செய்தியாளர்கள் நாயுடுவிடம் கேட்டதற்கு, தேர்தலில் இருந்து கவனத்தை திருப்பாதீர்கள் என்றார்.