டெல்லியில் யமுனையில் விநாயகர் சிலைகளை கரைக்கையில் 7 பேர் நீரில் மூழ்கி பலி
டெல்லி: டெல்லியில் விநாயகர் சிலைகளை யமுனை ஆற்றில் கரைக்கையில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வடக்கு டெல்லியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை நேற்று வாசிராபாத்தில் உள்ள யமுனை ஆற்றில் கரைக்கப்பட்டது. சிலையை 20 முதல் 30 வயது வரை உள்ள 12 பேர் தூக்கிச் சென்று ஆற்றுக்குள் இறங்கினர். ஆற்றில் ஆழம் இல்லாததால் அவர்களில் உட்பகுதிக்கு சென்றனர். அப்போது நீரின் வேகத்தால் அவர்கள் நிலை தடுமாறினர். இதையடுத்து ஆற்று நீர் அவர்களை அடித்துச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் நீரில் மூழ்கிய 12 பேரில் 7 பேரைத் தான் உயிரோடு காப்பாற்ற முடிந்தது. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 3 பேரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இதே போன்று காஷ்மீர் கேட் உள்ள குதேஷியா காட் பகுதியில் விநாயகர் சிலையை யமுனை ஆற்றில் கரைக்கும்போது 3 பேர் நீரில் மூழ்கினர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டார், மீதமுள்ள 2 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.