92 வயது பாட்டியை பலாத்காரம் செய்த கொடியவன்... தண்டனைக்கு சில நாட்களுக்கு முன்பே பாட்டி மரணம்
லக்னோ: உ.பியில், கடந்த 2011ம் ஆண்டு 92 வயது பாட்டியை ஒரு 26 வயது வாலிபன் அநியாயமாக பலாத்காரம் செய்து விட்டார். இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருந்த நிலையில் பாட்டி பரிதாபமாக இறந்து போனார்.
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை மன்ட்டு என்ற 26 வயது இளைஞன் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்ட்டுவைப் போலீஸார் கைது செய்தனர். விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் பாட்டியை மன்ட்டு பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து மன்ட்டு குற்றவாளி என்று சமீபத்தில் கோர்ட் தீர்ப்பளித்தது. விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பாட்டி மரணமடைந்துள்ளார். தன்னை இந்த வயதில் சீரழித்து விட்ட இளைஞன் தண்டனை பெறுவதைப் பார்க்காமலேயே பாட்டி இறந்துள்ளார்.