மீரட்: கணவனை அடித்த ஆண்களை பந்தாடிய வீராங்கனை மனைவி
மீரட்: அது நட்ட நடு சாலை... ஒரு ஆணின் சட்டையைப் பிடித்து உலுக்கி... கன்னத்தில் அறைந்து துவம்சம் செய்து கொண்டிருந்தார் ஒரு பெண்.
இதை சாலையில் நின்றிருந்த பெரும்பாலோனோர் பார்த்துக்கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த இடம் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரம்.
ஏன் இப்படி இந்தப் பெண் ஆவேசமாக தாக்குகிறார் என்று யோசிப்பவர்களுக்கு சின்ன ஃப்ளாஸ் பேக்
மீரட் நகர சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வாகனம் ஒரு கார் மீது உரசியது.
இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர்.
இதனை சாலையில் இருந்தவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர யாரும் அந்த நபரை காப்பாற்ற முன்வரவில்லை.
இந்நிலையில் தனது கணவர் தாக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுந்தார் மனைவி. இளைஞர்களை பிடித்து பளார், பளார் அறை விட்டார்.
சட்டையை பிடித்து தர, தரவென கிழித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ஆளை விட்டால் போதும் என காரில் பறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தை சாலையில் சென்று கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் படம் எடுத்து இணையத்தில் ஏற்றினார். முகநூலில் இப்போது அந்தப் பெண்ணின் வீரம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு உடல் ரீதியான பலவீனம் இல்லை என்பதை எடுத்துக் காட்டியதற்காக பலரும் அவரது துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்துக்கூறியுள்ள அந்தப் பெண், தனது கணவரை 5 பேர் சேர்ந்து கொண்டு அடித்தனர். அவரைக் காப்பாற்றவே நான் தாக்க நேரிட்டது என்று கூறியுள்ளார்.
சபாஷ்! இவரைப்போல எல்லா பெண்களும் மாறிவிட்டால், இனி எந்த ஆணும் அநாவசியமாக வாலாட்ட மாட்டான் என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.