ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் கவனத்திற்கு...!
டெல்லி: ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தாங்கள் போட்டியிட விரும்பும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தலா 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்துப் பெற்று சமர்ப்பித்தால்தான் டிக்கெட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இப்படிச் செய்யாமல் யாராவது விண்ணப்பித்தால் அவர்களது பெயர் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, தற்போது காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. அடுத்து லோக்சபா தேர்தலிலும் மகத்தான முத்திரையைப் பதிக்க அது ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில் சீட் பெற விரும்புவோருக்கான தகுதிகளை அது நிர்ணயம் செய்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தாங்கள் போட்டியிடும் தொகுதியிலிருந்து 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்தைப் பெற அது ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
தற்போது லோக்சபா தேர்தலில் இந்த தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலிருந்தும் தலா 100 பேரின் ஆதரவுக் கையெழுத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் சீட் தருவது குறித்து அவர்களது பெயர் பரிசீலிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எம்.பி. தொகுதியில் 5 முதல் 6 சட்டசபைத் தொகுதிகள் வரை இருக்கும். அதேசமயம் டெல்லியில், ஒரு லோக்சபா தொகுதிக்கு 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. எனவே டெல்லியில் ஏதாவது ஒரு தொகுதியில் யாராவது போட்டியிட விரும்பினால், அவர்கள் குறைந்தது 1000 பேருடைய கையெழுத்துக்களைப் பெற வேண்டியது அவசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காஸியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி அலுவலக நிர்வாகி ஷாலு கனோஜியா கூறுகையில், இதன் மூலம் தொகுதியில் அந்த வேட்பாளருக்கு போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய முடியும். டெல்லி சட்டசபைத் தேர்தலில் இந்த முறையை கேஜ்ரிவால் அறிமுகப்படுத்தினார். அவரே 100 பேரின் ஆதரவுக் கையெழுத்தை சமர்த்தபின்னர்தான் சீட் கேட்டிருந்தார் என்றார்.