4 மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய வேகத்தில் டெல்லி மாநில சட்டசபையில் கணிசமான இடங்களை கைப்பற்றியது. பின்னர் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறக்கிப் பார்த்தது ஆம் ஆத்மி கட்சி.
ஆனால் பஞ்சாப் மாநிலத்தில்தான் 4 இடங்களில் அந்த கட்சியால் வெல்ல முடிந்தது. இந்த நிலையில் விரைவில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற உள்ள 2 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னுரிமை கொடுத்து நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.