டாக்டர் அப்துல்கலாம் நலமுடன் வீடு திரும்பினார்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்துல்கலாமிற்கு சில தினங்களாக கடுமையான காய்ச்சலும் இருந்தது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அதை தொடர்ந்து அப்துல்கலாம் பூரணமாக குணம் அடைந்தார். இதையடுத்து நேற்று இரவு ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்ஜார்ஜ்' செய்யப்பட்டார்.
தற்போது டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள வீட்டில் அப்துல் கலாம் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் நன்றாக இருக்கிறார். வழக்கமான பணிகளில் ஈடுபடுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்துல்கலாம் முழுமையாக குணம் அடைந்து விட்டார். என்றாலும் குறைந்தது 10 நாட்கள் அவர் பயணம் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
82 வயதாகும் அப்துல்கலாம் நாடுமுழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று மாணவர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.