கோவில் திருவிழாவில் ஆரத்தி காட்டும் பிரச்சனையில் நடிகை ரோஜா மீது தாக்குதல்: ஜெகன் கண்டனம்
ஹைதராபாத்: ஆந்திராவில் நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா தாக்கப்பட்டதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரியில் இருக்கும் கெங்கம்மா கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவின் இரவு நேர நேரத்தில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தொகுதியின் எம்.எல்.ஏ. என்பதால் கடைசி ஆளாக ஆரத்தி காட்ட நடிகை ரோஜா வந்தார். அவர் ஆரத்தி காட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் விழாக்குழு தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸினருக்கும், தெலுங்கு சேதம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரோஜாவின் கையில் இருந்த ஆரத்தி தட்டை பறித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயம் தாக்கப்பட்டதில் ரோஜா காயம் அடைந்தார்.
இது குறித்து அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போன் செய்து நலம் விசாரித்தார். மேலும் தனது கட்சி எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.