நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு அதிமுக எம்.பிக்கள் உண்ணாவிரதம் - ஜெ. விடுதலை கோரி!
டெல்லி: டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில், மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக அதிமுக எம்.பிக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2 முறையும் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு விட்டது. அக்டோபர் 7ம் தேதிதான் மனு விசாரணைக்கு வரப் போகிறது. இதனால் குறைந்தது அக்டோபர் 7ம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டியாகி விட்டது.
இதனால் கொதிப்படைந்துள்ள அதிமுக வழக்கறிஞர்கள் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் தற்போது விவகாரத்தை டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளது அதிமுக. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளிக்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து இன்று அதிமுக எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அக்கட்சி எம்.பி. வேணுகோபால் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.