முதல்வர் அவமதிப்பு விவகாரம்: இலங்கையிடம் விளக்கம் கேட்க ராஜ்யசபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் அவதூறாக விமர்சனம் செய்யப்பட்டது குறித்து இலங்கையிடம் இந்தியா விளக்கம் கேட்க வேண்டும் என ராஜ்யசபாவில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அவதூறான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஷெனாலி டி வடுகே என்பவர் எழுதியுள்ள அந்தப் பதிவில், தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் சமீபத்திய இலங்கைப் பயணம் குறித்து பேசும் அக்கட்டுரையில், தமிழக அரசால் மீனவர் விவகாரத்தில் இனி மத்திய அரசிடம் இருந்து எந்த சலுகையும் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையே சுமூகமான உறவு இருப்பதாகவும் இனி தமிழக அரசால் இலங்கை அரசை மிரட்ட முடியாது என்பது போன்ற வாசகங்கள் அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இலங்கையை குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்டுவித்த மாதிரி எல்லாம் ஆட மோடி ஒன்றும் அவரது கைப்பாவை இல்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.
கடித தந்திரத்தை கைவிட்டுவிட்டு மோடி வலியுறுத்துவது போல் யதார்த்த நிலையை உணர்ந்து அரசாட்சி செலுத்துவது ஜெயலலிதாவுக்கு நல்லது. இந்திய கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை. மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது, அந்த படகுகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதா ? என்ற கேள்வியும் அந்த கட்டுரையில் உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதால் தான் இது போன்ற கைது நடவடிக்கைகள் தொடருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் ராஜ்யசபாவில் எதிரொலித்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் அவதூறாக விமர்சனம் செய்யப்பட்டது குறித்து இலங்கையிடம் இந்தியா விளக்கம் கேட்க வேண்டும் என ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.