14 வயது தங்கைக்கு திருமணம், முதலிரவு... கொதித்தெழுந்த சிறுவன் பெற்றோர் மீது புகார்
பெங்களூர்: தனது 14 வயது தங்கைக்கு திருமணம் செய்து வைத்ததாக தனது பெற்றோர் மீதே புகார் அளித்துள்ளான் பெங்களூர் சிறுவன் ஒருவன்.
பெங்களூர் புது குருபன்னப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தில் கடந்த வாரம் 14 வயது சிறுமிக்கு 24 வயது இளைஞன் ஒருவரை அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இத்திருமணம் அச்சிறுமியின் 16 வயது சகோதரனுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு சிறிய வயதில் தனது தங்கை திருமணம் என்ற பெயரில் எதிர்காலத்தை இழப்பதை எண்ணி மிகவும் மனம் வருந்தியுள்ளான்.
திருமணத்தைத் தொடர்ந்து அன்றிரவு தனது 14 வயது தங்கை முதலிரவு அறைக்குள் அனுப்பப் படுவதைப் பார்த்து கொதித்தெழுந்தான் அச்சிறுவன். உடனடியாக இது தொடர்பாக அருகில் இருந்த மைகோ லேஅவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தான்.
சிறுவனுடன் போலீசார் சம்பவ இடத்தை அடைந்த போது காலம் கடந்திருந்தது. சிறுமியை திருமணம் செய்த சையது முசமாயில் என்ற வாலிபரைக் கைது செய்த போலீசார், அழுது கொண்டிருந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.
இத்திருமணத்திற்குக் காரணமாக புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், அதற்குள் தகவலறிந்து சிறுமியின் பெற்றோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தற்போது போலீசார் தேடி வருகின்றனர் .கைது செய்யப்பட்ட சையது முசமாயில் மீது போஸ்கோ சட்டம் பாயும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முறையான கல்வி அறிவு இல்லாவிட்டாலும், அங்கும் இங்கும் கேட்ட சட்டத்திட்டங்களை நினைவில் கொண்டு தனது தங்கைக்கு மேலும், மேலும் கொடுமை நடக்காமல் தடுத்துள்ள சிறுவனை போலீசார் பாராட்டினர்.