கூட்டணி உடைந்தது: மோடி அமைச்சரவையில் இருந்து விலகும் சிவசேனா அமைச்சர் கீதே
மும்பை: மோடி அமைச்சரவையில் இருக்கும் சிவசேனாவைச் சேர்ந்த ஒரே அமைச்சரான அனந்த் கீதே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் 25 ஆண்டு கால பாஜக, சிவசேனா கூட்டணி உடைந்தது. இதையடுத்து மோடி அமைச்சரவையில் இருக்கும் ஒரே சிவசேனா உறுப்பினரான அமைச்சர் அனந்த் கீதே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் கீதே தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
இனியும் கீதே மோடியின் அமைச்சரவையில் இருக்க மாட்டார் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மோடி அமைச்சரவையில் இருந்து விலகும் முதல் அமைச்சர் கீதே என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
கீதே அமைச்சரவையில் தொடர்வது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அவருடன் இது குறித்து ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரம் இன்னும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. சிவவசேனாவுடனான கூட்டணி உடைந்தது துரதிர்ஷ்டவசமானது என்றார்.