சுஷ்மா, ராஜ்நாத் சிங்கின் வீடுகளும் உளவு?... பாஜக மறுக்கிறது!
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கத்காரியின் வீட்டில் உளவு பார்த்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீடுகளிலும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோஹ்லி கூறுகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே, பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனவே அது தொடர்பான தகவல்களைப் பெற சிலர் விரும்பியிருக்கலாம் என்பது எதிர்பாராத ஒன்றாக இருக்க முடியாது. அதேசமயம், அமைச்சர்களின் வீடுகளில் உளவு பார்க்கப்பட்டதாக கூறுவது சரியல்ல.
இதை அமைச்சர் கத்காரியும் கூட தெளிவுபட விளக்கியுள்ளார். எனவே அமைச்சர்களின் வீடுகளில் உளவு பார்க்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார்.
முன்னதாக டெல்லி தீன் மூர்த்தி லேன் பகுதியில் உள்ள கத்காரியின் வீட்டிலிருந்து சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் நடத்தி வரும் சண்டே கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. உடனடியாக இதை டிவிட்டரில் மறுத்திருந்தார் கத்காரி.
இந்த நிலையில் ராஜ்நாத் சிங்கும் கூட கத்காரி வீட்டில் உளவு பார்க்கப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறுகையில், நான் குஜராத்தைச் சேர்ந்தவன். மோடி முதல்வராக இருந்தபோது அங்கு ஒட்டுக் கேட்பது, உளவு பார்ப்பது சர்வ சாதாரணமாக நடந்தது. தற்போது அது டெல்லிக்கும் வந்து விட்டதாக சந்தேகம் எழுவதில் ஆச்சரியம் இல்லை. எனவே இது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மோடி இதற்குப் பதிலளிக்க வேண்டும். முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரை எப்போது பார்த்தாலும் அமைதி காப்பவர் என்று கிண்டலடித்தனர். இப்போது மோடி மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறார். பேச வேண்டியதுதானே என்றார் கோஹில்.