மங்கள்யானை தொடர்ந்து 2018ல் 'சந்திராயன்- 2': இஸ்ரோ திட்டம்
பெங்களூர்: மங்கள்யான் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து சந்திராயன் - 2 திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி பீமன் பாசு தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய அனுப்பப் பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் நாளை வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைய இருக்கிறது. இதன்மூலம், இந்தியா விண்வெளி அறிவியலில் புதிய சாதனையைப் படைக்க உள்ளது.
செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் பிரவேசிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி சரியாக போய்க் கொண்டுள்ளன.
இந்நிலையில், மங்கள்யான் திட்டத்தைத் தொடர்ந்து வரும் 2018ம் ஆண்டு சந்திராயன் -2 திட்டம் செயல்படுத்தப்படும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி பீமன் பாசு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-
சந்திராயன் -2...
‘மங்கள்யான்‘ வெற்றி பயணத்திற்கு பின் ‘சந்திராயன்-2‘ திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்ட மதிப்பு ரூ.426 கோடி ஆகும்.
ரஷ்யாவுடன் கூட்டில்லை...
‘சந்திராயன்-2‘ திட்டத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படும் திட்டம் இருந்தது. ஆனால், ரஷ்யா-சீனா கூட்டணியில், செவ்வாய்க்கு அனுப்பிய செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்தது.
2017ம் ஆண்டு...
ஆதலால், தற்போது, இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட ‘சந்திராயன்-2' திட்டத்தை செயல்படுத்துகிறோம். இது வரும் 2018ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்.
ஆதித்யா திட்டம்...
இதைத் தொடர்ந்து சூரியனை பற்றி ஆய்வு செய்ய ‘ஆதித்யா' திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.